இலங்கை அகதி முகாம் பெண் தீக்குளித்தது தொடர்பாக நியாயம் கேட்டு, கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை அகதிகள் முகாம் பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
கரூர் மாவட்டத்தில் ராயனூர், இரும்பூதிப்பட்டியில் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம் செயல்படுகிறது. இதில், ராயனூர் முகாமில் சுமார் ஆயிரத்து 700 பேர் வசித்து வருகின்றனர்.
கடந்த 2007-ல் காந்திகிராமத்தில் 2 குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகளை போலீஸôர் அண்மையில் கைது செய்தனர். இவர்களில் 2 பேர் ராயனூர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள்.
தேடப்படும் மற்றொரு குற்றவாளியும் இந்த முகாமைச் சேர்ந்தவராம். எனவே, போலீஸôரின் பார்வை முகாமின்மீது விழுந்தது. முகாமிலுள்ளோரிடம் அவர்கள் விசாரித்து வருகின்றனர். இதற்கு, குற்றவாளிகளைத் தேடுவதாகக் கூறி, அப்பாவிகளைச் சித்திரவதை செய்யக் கூடாது என்று முகாமிலுள்ளோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகள் கொலை வழக்கில் தொடர்புடைய குமார் என்ற தற்கொலை குமாரை (36) போலீஸôர் பிடிக்க முற்படும்போது, பாலத்திலிருந்து தவறி விழந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், குமாரைப் பார்க்க வேண்டுமென அவரது மனைவி பத்மாவதி என்ற தேவி (26) கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.
எனவே, மார்ச் 7-ல் தேவியை போலீஸôர் பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்திலிருந்து திரும்பிவந்த தேவி, தனது வீட்டிற்குள் சென்று தீக்குளித்தார். இதில், பலத்த காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"தேவியின் தற்கொலை முயற்சிக்கு போலீஸôர்தான் காரணம்; தேவியிடம் தவறாக நடக்க அவர்கள் முயற்சித்தனர். மேலும், அவரிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டதோடு, புகைப்படமும் எடுத்துள்ளனர். தனது கணவர் குமாரைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட போலீஸôர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்' எனக் கோரி முகாம் மக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸ் தடியடி, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மாலை வந்த சில பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவியை தீக்குளிக்கத் தூண்டியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார், ஆய்வாளர் பூ. முத்துக்கருப்பன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
courtesy:dinamani
|